ஹரே கிருஷ்ண ஜபம் எப்படி செய்ய வேண்டும்?

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே

என்ற 16 வார்த்தைகள் அடங்கிய மஹாமந்திரத்தை தினசரி குறைந்தபட்சம் 108 முறை உச்சரிப்பதே ‘ஹரே கிருஷ்ண ஜபம்’ என்பதாகும்.

பொதுவாக  108 முறை உச்சரிப்பதற்கு ஐந்தரை நிமிடம் முதல் ஏழு நிமிடங்கள் ஆகும்.

ஹரே கிருஷ்ண ஜபம் செய்வதன் மூலம் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் விசேஷ திருவருளை பெற்று, நிலைத்த மனஅமைதியையும் மகிழ்ச்சியையும் பெறலாம்.

பஞ்ச தத்வ மந்திரம்

ஸ்ரீகிருஷ்ண சைதன்ய பிரபு நித்யானந்த
ஸ்ரீஅத்வைத கதாதர  ஸ்ரீவாஸாதி கௌர பக்த விருந்த

என்ற பஞ்ச தத்வ மந்திரத்தைக்  ஒரு முறை சொல்லி விட்டு, பிறகு  ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை தொடர்ந்து 108 முறை சொல்ல வேண்டும். இந்த பஞ்ச த த்வ  மந்திரம், ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை நமக்கு எடுத்து தந்த ஸ்ரீசைதன்ய மஹாபிரபு மற்றும் அவரது சகாக்களின் திருநாமங்கள் அடங்கியதாகும். ஸ்ரீசைதன்ய மஹாபிரபுவின் கருணையை வேண்டி, மஹாமந்திரத்தை சொல்லும் போது நமது குறைபாடுகள் விரைவில் நீங்கி ஜபத்தின் முழு பலனையும் பெறலாம்.

ஜபமாலையில் எவ்வாறு ஜபம் செய்வது?

முதலில் ஜபமாலையை வலது கையில் பிடியுங்கள். ஜபமாலையை, வலது கை கட்டை விரலுக்கும், நடுவிரலுக்கும் இடையில்  நடுவிரலில் தொங்கும்படி பிடிக்கவும்.   ஆள்காட்டி விரல் மாலையைத் தொடாதவாறு பார்த்துக் கொள்ளவும்.

மாலையில் எல்லா மணிகளையும் விட, தலையாய மணி ஒன்று குஞ்சத்துடன் உள்ளது. இது கிருஷ்ண மணி எனப்படும். இக் கிருஷ்ண மணிக்கு அடுத்துள்ள பெரிய மணியை கட்டை விரலால் தொட்டவாறு,

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம ஹரே ராம

ராம ராம ஹரே ஹரே

என்ற மஹாமந்திரத்தை ஒரு முறை முழுவதும் சொல்லவும். அதே சமயம் உங்கள் காதுகள் மந்திர உச்சாடனத்தை தெளிவாகக் கேட்கட்டும்.

பின் கட்டை விரலால், அவ்விரல் தொட்டுக் கொண்டிருக்கும் மணியை உள் இழுக்கவும்.  அடுத்த மணியை கட்டை விரல் தொட்டுக் கொண்டிருக்கும்.  இப்பொழுது மறுபடியும் மஹாமந்திரத்தை முழுவதும் சொல்லவும், கேட்கவும் செய்யுங்கள்.  இவ்வாறு மாலையில் உள்ள 108 மணிகளையும் நகற்றி, 108 முறை மஹாமந்திரத்தை முழுவதும் உச்சரியுங்கள், கேளுங்கள்.  இப்பொழுது நீங்கள் ஒரு சுற்று சொல்லி முடித்திருப்பீர்கள். அதே சமயம்  கிருஷ்ண மணியின் மறுபக்கத்தையும் அடைந் திருப்பீர்கள்.

ஒரு சுற்று முடிந்தவுடன், அடுத்த சுற்றை ஆரம்பிக்க,  முந்தைய சுற்றின் கடைசி மணியில் ஜபத்தை ஆரம்பித்து, முந்தைய சுற்றின் முதல் மணியில் முடியுங்கள்.

பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் நாமத் திற்கும், அவருக்கும் எந்த வேறுபாடும் இல்லை. ஆகையால் அதிக முறை மஹாமந்திரம் சொல்லும் போது, கிருஷ்ணருடனும், அவருடைய ஆன்மீக சக்தியுடனும் அதிகத் தொடர்பு கொள்கிறீர்கள். ஆகையால் எத்தனை சுற்றுக்கள் அதிகமாக ஜபம் செய்ய முடியுமோ, அத்தனை சுற்றுக்கள் சொல்லலாம். அதிக பலனும் பெறலாம்.

ஒவ்வொரு சுற்றையும் ஐந்தரை நிமிடங்கள் முதல் ஏழு நிமிடங்களுக்குள் சொல்லலாம்.

எல்லாரும் சொல்லலாம்; கடுமையான கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை!

மஹாமந்திர ஜப யோகம் செய்ய எந்த வகையான குறிப்பிட்ட விதிமுறைகளும் இல்லை. எந்த சட்ட திட்டங்களும் இல்லை. 

எல்லா மதத்தினரும், இனத்தினரும், ஜாதியினரும், மொழியினரும் எவ்வித வேறுபாடும் இன்றி சொல்லலாம்.

எந்த இடம், நேரம், சூழ்நிலைகளிலும் சொல்லலாம். உட்கார்ந்தோ, நின்றோ, நடந்தோ, எந்நிலையிலும் சொல்லலாம். பயணத்தின் போதும், பல இடங்களில் காத்திருக்கும் பொழுதும், உறக்கத்தின் இடையிலும் கூட சொல்லலாம்.

சுத்தமாகவோ, சுத்தமற்ற நிலையில் இருந்தாலும் சொல்லலாம். மனம் குழம்பிய அல்லது தெளிவான நிலையிலும் சொல்லலாம். விரும்பியோ, விரும்பாமலோ சொல்லலாம்.

குறைபட சொன்னாலும், குறையில்லை. எப்படி சொன்னாலும், இம்மந்திரம் நன்மையே பயக்கும். குறைபட சொல்பவர்களின் குறைகளையும், இம்மந்திரமே, அதன் மகிமையால், படிப்படியாக நீக்கி விடும்.  பகவத்கீதை 10.25-ல், ‘‘யாகங்களில் நான் ஜப யாகமாய் இருக்கிறேன் என்று கிருஷ்ணர் கூறுவது ’பகவானின் நாமமே, ஜபமாக செய்யப்பட வேண்டும் என்பதை  வலியுறுத்துகிறது.

ஹரே கிருஷ்ண ஜபத்தின் பெருமைகள்

ஸ்ரீமத் பாகவதம் 12.3.52-ல், ‘‘சத்திய யுகத்தில் விஷ்ணுவை தியானிப்பதாலும், திரேதா யுகத்தில் யாகங்கள் செய்வதாலும், துவாபர யுகத்தில் கோயில் வழிபாடு செய்வதாலும் பெறக்கூடிய அனைத்து பலன்களையும் கலியுகத்தில் ஹரி நாமத்தை உச்சரிப்பதாலேயே பெற முடியும் என்று உரைப்பதானது, ’கலியுகத்தில் ஒரே வழி ஹரி நாமமே என்ற கருத்தை வலியுறுத்துகிறது.

ஸ்ரீமத் பாகவதம் 12.3.5-ல், ‘‘இக்கலியுகம் முழுவதும் குறைபாடுகள் நிரம்பியதாக இருந்தாலும், ஒரே ஒரு விஷயத்தில் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. இக்கலியுகத்தில் ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை ஜபம் செய்வதாலேயே, ஒருவர் இந்த ஜடவுலக பந்தங்களிலிருந்து விடுபட்டு ஆன்மீக உலகை அடையலாம் என்று கூறுவதானது, ’கலியுக முக்திப் பாதை ஹரே கிருஷ்ண மஹாமந்திரமே  என்பதை உறுதிப்படுத்துகிறது.

கலிசந்தரண உபநிஷத், ’’ஹரே  கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே; ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே என்ற  பதினாறு வார்த்தைகளைக் கொண்ட இம்மந்திரம், கலியின் கேடுகளை எதிர்த்து அழிக்கும் சக்தி வாய்ந்தது என்று கூறி, ’ஹரி நாமமே கலியின் கேடுகளை அழிக்கும் என்பதை உறுதி செய்கிறது.

பிருஹண் நாரதீய புராணத்தில், ‘‘ஹரிநாமம், ஹரிநாமம், ஹரிநாமம். இக்கலி யுகத்தில் நற்கதி அடைய இதை விட வேறு வழியில்லை, வேறு வழி யில்லை, வேறு வழியில்லை என்று கூறப் படுவது ’கலியுக கதி ஹரி நாமம் மட்டுமே, வேறுவழியில்லை என்பதை  உறுதிப் படுத்துகிறது.

ஹரே கிருஷ்ண ஜபம் பற்றி முழுமையாக அறிய  படிக்கவும்:

1. நம்பர்  ஒன் யோகா புத்தகம்

NO.1-Yoga Tamil pdf

2. ஏன் ஹரே கிருஷ்ண ஜபம் செய்ய வேண்டும்?

Why Chant Hare Krishna – Tamil pdf

ஜபமாலை மற்றும் புத்தகங்கள் வாங்குவதற்கு தொடர்பு கொள்ளவும்:
இஸ்கான் மதுரை – 9894903630, 0452 2346472
இஸ்கான் திருநெல்வேலி – 9566946010, 0462 2501640
இஸ்கான் பெரியகுளம் – 7092203080